தினமணி 30.06.2010
கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்
விருதுநகர், ஜூன் 29: புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளூர் குழுமம் மூலம் அனுமதி வழங்க கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ளாட்சிப் பகுதிகளில் அனைத்து விதிகளின்படி மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தமிழகத்தில் செனனை பெருநகர்ப் பகுதி நீங்கலாக, நான்கு குடியிருப்புகள் அல்லது மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இதன்படி, 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரு தளங்கள் கொண்ட கட்டடங்கள்.
2000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரைத் தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் உள்ளாட்சி அமைப்பு அளிக்கலாம்.
அதே சமயத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவில் எவ்வித மனை ஒப்புதல் அல்லது கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது.
மேற்படி, அதிகார வரம்புக்குள்பட்டு உள்ளாட்சி அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்ட அதே இடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பித்தால், அதற்கு குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்பு அனுமதி வழங்க இயலாது. அவ்வாறு தரும் விண்ணப்பங்களை உள்ளூர் திட்டக் குழும அலுவலகம் மற்றும் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஆட்சியர்.