Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மதுரை நகர அடிப்படை வசதி விபரங்கள் விரல் நுனியில் : 'சாட்டிலைட் சர்வே' 3 மாதத்தில் முடியும்

Print PDF

தினமலர் 16.03.2010

மதுரை நகர அடிப்படை வசதி விபரங்கள் விரல் நுனியில் : 'சாட்டிலைட் சர்வே' 3 மாதத்தில் முடியும்

மதுரை : மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கட்டடங்கள், காலி இடங்கள், குடிநீர் இணைப்புகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் கொண்டு வருவதற்கான, "சாட்டிலைட் சர்வே' நேற்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள சில நகரங்களைப் பற்றிய முழு விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு உலக வங்கி, கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே கோவை மாநகராட்சி, ராஜபாளையம், கோபி நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, முடியும் நிலையில் இருக்கிறது. தற்போது இத்திட்டத்திற்காக "சர்வே' எடுக்கும் பணி மதுரையில் நேற்று முதல் துவங்கியது.

இப்பணியை "டாடா கன்சல்டிங் சர்வீசஸ்' (டி.சி.எஸ்.,) நிறுவனம் மேற் கொண்டுள்ளது. 60 பேர், 30 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடாக செல்வர். இவர்கள் செல்லும்போது, ஒவ்வொரு கட்டடத்தின் அளவு, வரி விதிக்கப்பட்ட விபரம், அதன் எண், குடியிருப்பா வணிக ரீதியிலானதா, வாடகைக்கு விடப்பட்டுள்ளதா சொந்த உபயோகத்தில் உள்ளதா, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, என்ன வகையான கட்டடம் (குடிசை, ஓடு, கான்கிரீட்), தெருக்களின் அளவு ஆகிய விபரங்கள்; விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள், பஸ் ஸ்டாண்டுகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். இவற்றைக் கொண்டு ஒரு வரைபடம் தயாரிக்கப்படும்.

சென்னையில் உள்ள மாநில தகவல் மையத்திற்கு இத்தகவல்கள் அனுப்பப்படும். அதன் பிறகு இவை, இணையதளத்தில் ஏற்றப்படும். மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஒரு கட்டடத்தைப் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் "கிளிக்' செய்து அறியலாம். சில குறிப்பிட்ட வரைமுறைக்குள் பொதுமக்களும் விபரங்களை அறியலாம். கட்டட உரிமையாளரின் பெயர், வரி விதிப்பு எண், தெருவின் பெயர் போன்ற விபரத்தில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டால் கூட, கட்டடம் பற்றிய முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான "இணையதள' முகவரி பின்னர் அறிவிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் இப்பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்தும் விதம் குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு "டி.சி.எஸ்.,' நிறுவன அலுவலர்கள் பயிற்சி அளிப்பர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்தை சேர்ந்தவர்களே இணையதளத்தை பராமரிப்பர். மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் நேற்று இத்திட்டத்தை துவக்கினர். தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ராஜகாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், செயற்பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 16 March 2010 09:35
 

கட்டிட அனுமதி வழங்குவதில் தாமதம்: வரைபடம் தயாரிப்பு பணி புறக்கணிக்க முடிவு

Print PDF

தினமலர் 01.03.2010

கட்டிட அனுமதி வழங்குவதில் தாமதம்: வரைபடம் தயாரிப்பு பணி புறக்கணிக்க முடிவு

சேலம்: சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கும் பணியை புறக்கணிக்க சேலம் உள்ளூர் திட்ட குழுமத்தில் உரிமம் பெற்ற கட்டிட வரைவாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஒருவர் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சேலம் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. சேலம் மாநகராட்சியில் பதிவு செய்து லைசென்ஸ் பெற்ற பொறியாளர்களிடம் இருந்து கட்டிட வரைபடம்(புளூபிரின்ட்) பெற்று வந்தால் மட்டுமே கட்டிட அனுமதி பெற முடியும்.

லைசென்ஸ் பெற்ற பொறியாளர்கள் கட்டிட விதி, திட்ட விதி, முழுமை திட்ட விதி, வளர்ச்சி கட்டுப்பாடு, மலைப்பிரிவு விதி ஆகியவற்றுகுட்பட்டு வரைபடங்களை தயார் செய்து கட்டிட அனுமதியை பெற்று கொடுக்கின்றனர்.சேலம் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்ற பொறியாளர்கள் 120 பேர் உள்ளனர். பொறியாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சேலம் மாநகராட்சியில் 1,000 ரூபாய் செலுத்தி தங்கள் லைசென்ஸை புதுப்பித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பொறியாளர்கள் கட்டிட அனுமதி பெற்று கொடுப்பதன் மூலம் மாநகராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. சில மாதங்களாக சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்கள் மூலமாக வழங்கப்பட்ட பெரும்பாலான விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. அவர்களால் அடுத்த கட்டிடத்துக்கான திட்ட வரைபடங்களை தயார் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு சராசரியாக மாதம் மூன்று அல்லது நான்கு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று கொடுத்து வந்த பொறியாளர்கள், தற்போது இரண்டு மாதத்துக்கு ஒரு கட்டிடத்துக்கு அனுமதி பெறுவதையே குதிரை கொம்பாக கருதுகின்றனர். பொறியாளர்களிடம் கட்டிட அனுமதி வேண்டி பணம் கொடுத்த பலர், காலதாமதம் ஆவதால் மாநகராட்சி அனுமதியின்றி கட்டுமான பணிகளை துவக்கி வருகின்றனர்.அனுமதி பெற்ற பொறியாளர்கள் மூலம் தற்போது மாதம் 2 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. சேலம் மாநகராட்சி திட்டப்பிரிவு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே இப்பிரச்னைக்கு காரணம்.சேலம் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்ற பொறியாளர்கள் பல முறை இப்பிரச்னை குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

மாநகராட்சியில் அனுமதி பெற்ற கட்டிட பொறியாளர்கள் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வேண்டி வரைபடம் தயாரிக்கும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் உள்ளூர் திட்டக்குழுமத்தில் உரிமம் பெற்ற கட்டிட வரைவாளர்கள் சங்க கூட்டம் வின்சர் கேஸில் ஹோட்டலில் நடந்தது. அதில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட உள்ளது. லைசென்ஸ் பெற்ற பொறியாளர்களின் முடிவால் சேலம் மாநகராட்சிக்கு ஏற்கனவே கிடைத்து வந்த சொற்ப தொகையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Monday, 01 March 2010 06:40
 

வரைபட அனுமதி இல்லாமல் வீடுகள்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அதிகரிப்பு

Print PDF

தினமலர் 23.02.2010

வரைபட அனுமதி இல்லாமல் வீடுகள்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அதிகரிப்பு

மடத்துக்குளம் : வரைபட அனுமதி இல்லாமல் இஷ்டம் போல் வீடுகள் கட்டப்படுவதால் மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் அதிகளவில் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.காலி இடங்களில் வீடுகள் கட்ட வேண்டுமானால் கட்டப்படும் கட்டடம் குறித்த வரைபடம் சம்பந்தப்பட்ட ஊராட்சிஅல்லது பேரூராட்சிகளில் வழங்கி முறையாக அனுமதி பெற்று கட்டப்பட வேண்டும்.

வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள சதுர அடியை வைத்து வீடு, கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்படும்.இது பொதுவான நடைமுறையாகும்.ஆனால், மடத்துக்குளம் பேரூராட்சியின் பல்வேறு இடங்களில் தற்போது கட்டப்படும் கட்டடங்களுக்கு வரைபட அனுமதி வாங்குவது இல்லை. முன் கட்டிய பழைய வீடுகளின் வரைபட அனுமதியை வைத்துக்கொண்டு புதிய கட்டடங் கள் கட்டப்பட்டு வருகிறது. அல்லது வரைபடத்தில் சதுர அடிகளை குறைவாக குறிப்பிட்டு அனுமதி பெறப்பட்டு வருகிறது.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் நேரில் ஆய்வு செய்வது இல்லை. இதனால் பேரூராட்சியினருக்கு ஆண்டு தோறும் பல லட்ச ரூபாய்கள் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. செயல்அலுவலர் திருமலைசாமி கூறியதாவது: இதற்கு முன் வரைபட அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை,தற்போது முறையாக ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது,பேரூராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது,முறைகேடாக கட்டடம் கட்டுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 'என்றார.

Last Updated on Tuesday, 23 February 2010 07:06
 


Page 77 of 96