Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மதுரையில் பெருநகர வளர்ச்சி குழுமம்

Print PDF

தினமலர் 23.12.2009

மதுரையில் பெருநகர வளர்ச்சி குழுமம்

மதுரை : சென்னையிலுள்ள சிஎம்டிஏயைப்போல மதுரை, கோவை மாநகராட்சிகளிலும் பெருநகர வளர்ச்சிக்குழுமம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் சுர்ஜித்சிங் சவுத்ரி கூறினார்.

மதுரையில் நகர் ஊரமைப்புத்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் சுர்ஜித்சிங் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது.

நகர் ஊரமைப்பு ஆணையர் அசோக் டோங்ரே, கலெக்டர் மதிவாணன் மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் நிருபர்களிடம் முதன்மைச் செயலாளர் கூறியதாவது: உள்ளூர் திட்டக் குழுமத்தில் வரைபட அனுமதி கேட்டு வரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்தன. இதை தீர்ப்பது குறித்து மாநிலம் முழுவதிலும் ஆய்வுக்கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் மதுரையில் ஆய்வு நடத்தப்பட்டது. வரைபட அனுமதி கேட்டு வரும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்வு காணப்படாவிட்டால் அதற்கான காரணத்தை உடனடியாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏராளமான விண்ணப்பங்கள் தீர்வு காணப்படாததற்கு முக்கிய காரணம் முழுமையாக சமர்ப்பிக்கப்படாததால்தான். இனிமேல், விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என பட்டியல் வைக்கப்படும். அதனடிப்படையில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இதர விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். சென்னையில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தைப் போல (சி.எம்.டி..) மதுரை, கோவை நகரங்களிலும் பெருநகர வளர்ச்சிக்குழுமம் தனியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும். உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிமூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி வசூலாகிறது. மதுரையில் 1994ம் ஆண்டிலிருந்து இந்த நிதி வசூலிக்கப்படாதது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தவறான வரைபடங்களை தாக்கல் செய்யும் வரைபடம் வரைவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 80 சதவீத விண்ணப்பங்கள் மீது தீர்வு காணப்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் புதிய நகர் அமைப்பு பிரிவிற்கு ஒரேமனு மட்டும் வந்துள்ளதால், இந்த அமைப்பை மதுரையுடன் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

மதுரை, கோவையில் விரைவில் பெருநகர வளர்ச்சி குழுமம்: வீட்டு வசதி துறை செயலர்

Print PDF

தினமலர் 23.12.2009.

மதுரை, கோவையில் விரைவில் பெருநகர வளர்ச்சி குழுமம்: வீட்டு வசதி துறை செயலர்

மதுரை: ""சென்னையை போல மதுரை, கோவையில் விரைவில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (மெட்ரோபாலிடன் டெவல்மென்ட் அதாரிட்டி) அமைக்கப்படும்,'' என, வீட்டுவசதித் துறை முதன்மை செயலாளர் சுர்ஜித்சிங் சவுத்ரி கூறினார். மதுரையில் நகர ஊரமைப்புத் துறையின், மண்டல ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அரசு முதன்மை செயலாளர் சுர்ஜித்சிங் சவுத்ரி தலைமை வகித்தார். கமிஷனர் அசோக் டோங்ரா, கலெக்டர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், உதவி கலெக்டர் ரோகிணி, கூடுதல் இயக்குனர் மாணிக்கவாசகம், துணைஇயக்குனர் மகாதேவன் பங்கேற்றனர். பின்பு அரசு முதன்மை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர் திட்டக் குழுமத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அவை குறித்த புகார்களும் நிறைய வருகின்றன. இதனால் மண்டல அளவில், ஆய்வுக் கூட்டம் நடத்த அமைச்சர் பரிதிஇளம்வழுதி உத்தரவிட்டார். இதையடுத்து, இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மதுரையில் பெறப்பட்ட 83 மனுக்களில் 65 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.

இனி வரும் நாட்களில், உள்ளூர் திட்ட குழுமங்களில் மனு கொடுத்த 30, நாட்களில் தீர்வு காணப்படும். தாமதமானால் உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தரவேண்டும்.

இதற்காக விண்ணப்பத்துடனே, மனுதாரர் தரவேண்டிய ஆவணங்கள் குறித்த "செக்லிஸ்ட்' வழங்கி, அதன்படியே மனுக்கள் பெறப்படும். விண்ணப்ப அளவில் பல குறைபாடுகள் இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல், அனுமதி வழங்குவதில் தாமதமாகின்றன. விண்ணப்பத்துடன் ஆவணங்கள் முறையாக வைக்காவிட்டால், மனு அளவிலேயே அவை நிராகரிக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் பலர் தெரிந்தே குறைபாடுள்ள விண்ணப்பங்களை வழங்குகின்றனர். இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் உள்ள பெருநகர வளர்ச்சிக் குழுமம், போன்ற அமைப்புகள் மதுரை, கோவையில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநகரில் உள்கட்டமைப்பு வரி வசூலிக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் 1994 முதல் இவ்வரியை வசூலிக்கவில்லை. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விசாரித்து வருகிறோம், என்றார்.

 

மதுரை, கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம்

Print PDF

தினமணி 23.12.2009

மதுரை, கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம்

மதுரை, டிச.22: சென்னையைப் போல மதுரை, கோவையிலும் பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் சுர்ஜித்சிங் செüத்ரி தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர் ஊரமைப்புத்துறையின் மதுரை மண்டல ஆய்வுக்கூட்டம் அவரது தலைமயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து இன்று ஆய்வுசெய்யப்பட்டது.

இதில் மொத்தம், கட்டட வரைபட அனுமதி கோரும் 83 மனுக்கள் நிலுவையில் இருந்தன. இதில் 65 மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள 18 மனுக்கள் மீது 2 மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

கட்டட வரைபட அனுமதி கோரி முறையாக பூர்த்திசெய்யப்பட்டு வரும் விண்ணப்பங்களுக்கு, அவர்கள் குறிப்பிடும் இடம் எவ்விதப் பிரச்னைகளுக்கும் உட்படாமல் இருந்தால் விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.

இதேபோன்று ஈரோடு, திருப்பூரில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்தபடியாக திருச்சியில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக்கான நிதியின் மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், மதுரை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 1994}ம் ஆண்டு முதல் இந்நிதி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்புஏற்பட்டுள்ளது.

இந்நிதியை வசூலிக்காதது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நகர் ஊரமைப்பு ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சுர்ஜித்சிங் செüத்ரி.

பேட்டியின்போது, நகர் ஊரமைப்பு ஆணையர் அசோக்டோங்ரே, மதுரை மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாஜிபகரே ரோகிணி ராமதாஸ், நகர் ஊரமைப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஜி.மாணிக்கவாசகம், துணை இயக்குநர் ஏ.வி.மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


Page 81 of 96