தினமணி 11.12.2009
கோவையில் பெருநகர வளர்ச்சி குழுமம்: ஸ்டாலின்
கோவை, டிச.10: கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் விரைவில் துவக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) நிர்வாகிகள் மற்றும் தொழில்அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போல கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்கப்பட்டு, கட்டட விதிமுறைகள் திருத்தம் விரைவில் செய்யப்படும்.
குறிச்சி, குனியமுத்தூர், காளப்பட்டி, கவுண்டம்பாளையம் ஆகியவற்றை கோவை மாநகராட்சியுடன் இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நொய்யல் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, துணை முதல்வரின் செயலர் தீனபந்து,தொழில்துறை முதன்மை செயலர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.