தினமணி 07.11.2009
உயரமான கட்டடங்களுக்கு அனுமதி: சி.எம்.டி.ஏ. ஆர்வம்
சென்னை, நவ. 6: உயரமான பல மாடி கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஆர்வமாக உள்ளது என அதன் உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.
மத்திய திட்டக் குழுவின் ஒரு அங்கமான கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில், உயரமான பலமாடிக் கட்டடங்கள் குறித்த கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது:
இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து விக்ரம் கபூர் பேசியது:
சென்னையில் அதிகரித்துவரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களின் குடியிருப்புத் தேவையும் உயர்ந்து வருகிறது. இதனால், இருக்கும் நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையிலான மக்களை குடியமர்த்த வேண்டும். இதற்கு கட்டடங்களுக்கான உயரக் கட்டுப்பாடு தடையாக இருந்தது.
எனவே, சி.எம்.டி.ஏ.வின் 2-வது மாஸ்டர் பிளானில் பலமாடி கட்டடங்களுக்கான உயரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும், சாலை பரப்பு விதிமுறைகளுக்கும் வானிலை ஆராய்ச்சி மையத்தின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு எவ்வளவு அடுக்கு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புறநகரில் இந்த வகை கட்டடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அனுமதி அளிப்பதில் சி.எம்.டி.ஏ. ஆர்வமாக உள்ளது.
இது தொடர்பாக எழும் நடைமுறை சார்ந்த பிரச்னைகள் குறித்த தங்களது பரிந்துரைகளை கட்டுமானத் துறையினர் தெரிவிக்க வேண்டும் என்றார் விக்ரம் கபூர்.
பிரதமரின் முன்னாள் நிதித்துறை ஆலோசகர் ஜி.வி. ராமகிருஷ்ணா, கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தமிழக பிரிவு தலைவர் வி. கணேசன், செயலாளர் எம்.கே. சுந்தரம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.