Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நகரமைப்பு சட்ட திருத்தம் மூலம் சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம்? : அதிகாரிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

Print PDF

தினமலர்          07.08.2012

நகரமைப்பு சட்ட திருத்தம் மூலம் சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம்? : அதிகாரிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

டில்லி, மும்பை போன்று தனி நிர்வாக அமைப்பை ஏற்படுத்தாமல், நகரமைப்பு சட்டத் திருத்தம் மூலமே, சி.எம்.டி.ஏ., எல்லைகளை விரிவாக்கம் செய்வது குறித்து, உயர் அதிகாரிகள் நிலையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பிற பெரு நகரங்களை விட, சென்னை பெருநகர பகுதியின் பரப்பளவு மிகவும் குறைவு. சென்னை பெருநகர எல்லைக்கு வெளியே வளர்ந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர், கேளம்பாக்கம், திருவள்ளூர் உள்ளிட்ட சிறு நகரங்களும், இவற்றின் சுற்றுப்புற பகுதிகளிலும் தாறுமாறான வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

விரிவாக்கம் : இதை நெறிப்படுத்த இப்பகுதிகளை, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் கொண்டு வருவது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைகள் வந்தன. இதை கருத்தில் கொண்டு, டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ளது போன்று, சென்னையிலும் பெருநகர் பகுதி எல்லையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது.

2 பரிந்துரைகள் : சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகளை கொண்டு, இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு இரண்டு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசுக்கு சில மாதங்கள் முன் அளித்தது.

இதன்படி, தற்போது, 1,189 சதுர கி.மீ.,ஆக உள்ள பரப்பளவை, இரண்டு வகையில் அதிகரிப்பது பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு பரிந்துரையில், 4,459 சதுர கி.மீ.,ஆக அதிகரிக்கலாம் என்றும், மற்றொன்றில், 8,878 சதுர கி.மீ.,ஆக விரிவாக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன் செயலாக்கத்துக்காக, ஏற்கனவே, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட, டில்லி, மும்பை அதிகாரிகளையும், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி, வருவாய்த் துறை அதிகாரிகளையும் அழைத்து கலந்தாலோசிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டம், வரும் 9ம் தேதி நடைபெறும் என தெரிகிறது.

அதிகாரிகள் ஆலோசனை : இதனிடையே, சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் குறித்து விவாதிக்க, உயர் அதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்த பரிந்துரைகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இவ்விரு பரிந்துரைகளை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான இரு வழிமுறைகள் அப்போது முன்வைக்கப்பட்டன. இதன்படி, டில்லி, மும்பை நகரங்களில் பெருநகர் பகுதி எல்லைகளை விரிவாக்கம் செய்த போது, அதன் நிர்வாகத்துக்காக, சி.எம்.டி.ஏ., போன்று அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களுடன் மேலும் ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக, டில்லியில் ஏற்கனவே டில்லி பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்பட்டு வந்த நிலையில், அதன் விரிவாக்கத்தின் போது, தேசிய தலைநகர் வளர்ச்சி மண்டலம் (என்.சி.ஆர்.,) என, தனியாக ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

சட்டத்திருத்தம் மூலம்... : சென்னையிலும், சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் செய்யும் போது, சென்னை பெருநகர் வளர்ச்சி மண்டலம் என, மேலும் ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு ஏற்படுத்துவதற்கு தனியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். அத்துடன், ஏற்கனவே, உள்ளாட்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் இன்னொரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவதால், நிர்வாகச் செலவு தான் ஏற்படுமே தவிர தனியாக எவ்வித பயனும் இருக்காது. எனவே, இப்போதுள்ள சி.எம்.டி.ஏ., நிர்வாக எல்லையை மட்டும் நகரமைப்பு சட்டத்திருத்தம் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இப்போது, சி.எம்.டி.ஏ.,வுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கலாம். மேலும், அந்தந்த பகுதிகளில் வளர்ச்சியையும் நெறிப்படுத்தலாம். இதனால், தேவையற்ற நிர்வாகச் செலவும், கால விரயமும் தவிர்க்கப்படும். இது குறித்து, அரசுக்கு தெரிவித்து, அடுத்த நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

 

திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தின் வடிவத்தை மாற்ற முடியுமா? புது சிக்கல்

Print PDF

தினமலர்                                            30.07.2012

திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தின் வடிவத்தை மாற்ற முடியுமா? புது சிக்கல்

அடுக்குமாடி கட்டுமான திட்ட வரைபடங்களில் திருத்தங்கள் செய்யும்போது, திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களின் வடிவத்தை மாற்றக்கோரும் நிறுவனங்களால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ., வின் வளர்ச்சி விதிகளின்படி, 3,000 சதுர அடிக்கு அதிகமான கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளும்போது, அந்த நிலத்தின் மொத்தப்பரப்பில், 10 சதவீத நிலத்தை திறந்தவெளி பகுதியாக ஒதுக்க வேண்டும். பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் பயன்பாட்டுக்காக, இவ்வாறு ஒதுக்கப்படும் நிலங்களை, கொடை ஆவணம் மூலம் சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் திட்ட அனுமதி கோரும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு பெறப்படும் திறந்தவெளி நிலங்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கும். இத்தகைய திறந்தவெளி ஒதுக்கீடாக வழங்கப்படும் நிலங்களை பெற மட்டுமே சி.எம்.டி.ஏ.,வுக்கும், மாநகராட்சிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களை திருப்பி அளிக்கவும், அளவுகளை மாற்றவும் அதிகாரம் வழங்கப்படவில்லை.சிக்கல்திட்ட அனுமதி கோரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை திறந்தவெளி நிலமாக காட்டி, கொடை ஆவணம் மூலம், சி.எம்.டி.ஏ.,விடம் கட்டுமான நிறுவனங்கள் ஒப்படைத்து விடுகின்றன. ஆனால், இந்நிறுவனங்கள், தங்களது திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் பெறும் சமயத்தில், திறந்தவெளி நிலத்தின் அளவு, வடிவத்தை மாற்ற அனுமதி கேட்கின்றன.

உதாரணமாக, அண்ணா சாலையில், ஹால்டா சந்திப்பில், நட்சத்தில் ஓட்டல் கட்டும் திட்டத்தை மேற்கொண்டுள்ள, ஐ.டி.சி., நிறுவனம், முதலில், திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, அங்குள்ள 10 சதவீத நிலமான 14.5, "கிரவுண்ட்' நிலத்தை திறந்தவெளி பகுதி ஒதுக்கீடாக சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைத்தது. இந்நிறுவனத்தின் திட்ட வரைபடத்தில் திருத்தங்கள் செய்யும் போது, திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தை மாற்றுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மாற்றக் கோரிக்கை இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.டி.சி., நிறுவனம் ஒதுக்கீடு செய்து, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்ட நிலம், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், இந்நிலத்தில் பூங்கா அமைத்து பராமரிக்கும் பொறுப்பை, மாநகராட்சியின் தீர்மானம் மூலம், ஐ.டி.சி., நிறுவனம் பெற்றுள்ளது. இதில், ஐ.டி.சி., நிறுவனம் கட்டும் ஓட்டலில், "ஹெலிபேட்' அமைக்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைத்தது. இதற்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, திட்ட வரைபடத்தை ஐ.டி.சி., நிறுவனம் மீண்டும் திருத்தி அமைத்தது. இவ்வாறு, திட்ட வரைபடத்தை திருத்தியதில், திறந்தவெளி ஒதுக்கீடுக்கான நிலத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்களையும் மாற்ற அந்த நிறுவனம் அனுமதி கோரியது. இதை ஆய்வு செய்த அதிகாரிகள், திறந்தவெளி நிலத்தின் அளவை மாற்ற முடியாததால், குறிப்பிட்ட சில நிபந்தனைகள் அடிப்படையில் இந்நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரம் இல்லை இந்த நிறுவனம் மட்டுமல்ல, மேலும் சில அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கான வரைபடங்களில் திருத்தம் செய்யும்போதும், திறந்தவெளி நிலங்களின் அமைப்பை மாற்றுவது தொடர்பாக சிக்கல் எழுகின்றன.இதில், திறந்தவெளி நிலத்தின் அளவை மாற்றுவது குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களும், அரசிடமிருந்து வழிகாட்டுதல்கள் பெற்று அதன் அடிப்படையிலேயே முடிவெடுக்க முடியும். இச்சிக்கலுக்கு தீர்வுக்காணும் வழிமுறைகளை எளிமைபடுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

-நமது நிருபர்-

 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் வடிகால் திட்டப் பணி துவக்கம்

Print PDF

தினமணி        30.11.2011

மேட்டுப்பாளையம் நகராட்சியில் வடிகால் திட்டப் பணி துவக்கம்

மேட்டுப்பாளையம், நவ. 29: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கோவை - அன்னூர் சாலை சந்திப்பிலிருந்து, காந்திபுரம் முதல் வீதிவரை 250 மீட்டர் தூரத்துக்கு ரூ.9.50 லட்சம் மதிப்பில், மழைநீர் வடிகால் கட்டும் பணிக்கான துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 2 வருடங்களுக்கு முன்னர், சாலையை விரிவுபடுத்துவதற்காக, நகர நெடுஞ்சாலைத் துறையினரால், கோவை சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடைகள் இடிக்கப்பட்டன. ஆனால், சாக்கடைகள் மீண்டும் கட்டப்படாததால், அப்பகுதி கோழி இறைச்சிக் கடையிலிருந்து வரும் கழிவு உள்ளிட்ட பிற கழிவும் சேர்ந்து, சாலையோரத்தில் சாக்கடை போல ஓடிக் கொண்டுள்ளது. சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள், சாக்கடை அமைக்க வேண்டுமென நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், ரூ.9.50 லட்சம் மதிப்பில் 250 மீட்டர் தூரத்துக்கு மீண்டும் வடிகால் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

 பங்களாமேடு ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டப் பணி துவக்க விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார்.

  துணைத் தலைவர் ரமா செல்வி, நகராட்சி உதவிப் பொறியாளர் சண்முகவடிவு முன்னிலை வகித்தனர். சக்தி விநாயகர் கோயில் குருக்கள் நடத்திய பூமி பூஜைக்குப் பின், பணி தொடங்கி வைக்கப்பட்டது.

 நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், மகேந்திரன், ஜெகநாதன், ராஜேஸ்வரி, நாகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இன்னும் 2 மாதத்துக்குள் வடிகால் அமைக்கும் பணி முடிவடையுமென, நகராட்சி உதவிப் பொறியாளர் சண்முகவடிவு தெரிவித்தார்.

 


Page 25 of 96