Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

புதிய வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை

Print PDF

தினகரன்             06.12.2010

புதிய வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை

புதுக்கடை, டிச.6: கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் அமைத்து விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள் அமைத்து (பிளாட்டுகள்) விற்பனை செய்ய தனியார் முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.

கீழ்குளம் பேரூராட்சி சார்பில் இதுவரை வீட்டு மனைகள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே பொதுமக்கள், விட்டுமனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் மனை வாங்கி ஏமாற வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது.மேலும் இதற்கு பேரூராட்சி சார்பாக எந்த அனுமதியும் வழங்க இயலாது. மனை அனுமதி பெறப்பட்டு உள்ளது என யாராவது கூறினால் அது உண்மை அல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மழைநீர் வடிகால் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன்               06.12.2010

மழைநீர் வடிகால் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைத்தார்

கோவை, டிச.6: கோவை மாநகரில் சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இதை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 72 வார்டு பகுதிகளில் சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு தொழில்நுட்ப கலந்தாலோசக நிறுவனத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாநகரப் பகுதி 112 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மூன்று பகுதிகளாக செயல்படுத்தப்பட உள்ளது. சாலையோர மழைநீர் வடிகாலில் சேகரமாகும் மழைநீரால், வெள்ளப் பெருக்கு ஏற்படாத வகையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட 5 பிரதான இயற்கை வடிகால் மூலமாக 8 நீர்நிலைகளில் சேரும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் முதல் பகுதியான 31 மண்டலங்களில் சாலையோர மழைநீர் வடிகால் சுமார் 731 கி.மீ. நீளத்திற்கு ரூ.180 கோடி செலவில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த 2009 ஆகஸ்ட் 28&ம் தேதி ஒப்புதல் அளித்தன. இம் மண்டலத்துக்கு உட்பட்ட 8 வார்டுகள் முழுமையாகவும், 42 வார்டுகளில் பகுதியாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத் திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 18&ம் தேதி தமிழக அரசிடம் நிர்வாக அனுமதி பெறப்பட்டது. பின்னர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 7 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இப் பணிகளைச் செய்ய 3 தனியார் நிறுவனங்களுக்கு நவ.3&ம் தேதி உத்தரவிடப்பட்டது. 18 மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். மேற்படி பணிக்கான சர்வே முடிக்கப்பட்டு மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவில்மேடு (வார்டு 60) பகுதியில் உள்ள இயற்கை வடிகால் சேரும் இடத்தில் இருந்து பணிகளை மேற்கொள்ள நேற்று பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவங்கின.

இதைத் தொடர்ந்து கணபதி, மணியகாரம்பாளையம் பகுதிகளில் பூமி பூஜை பணிகளை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி துவக்கி வைத்தார். மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், பணிக்குழுத் தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் சுமதி காயத்ரி, சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி 60வது வார்டில் ரூ.18.16 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் பொங்கலுர் பழனிச்சாமி நேற்று துவக்கிவைத்தார். அருகில் மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா, பணிக்குழு தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் சாந்தாமணி ஆறுமுகம், காயத்ரி.

 

விதி மீறல்: 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி             02.12.2010

விதி மீறல்: 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

சேலம், டிச. 1: சேலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 80 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் தெரிவித்தார்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கட்டடம் கட்டுவதில் உள்ள இடர்பாடுகளை களைவதற்காக சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த பங்கஜ் குமார் பன்சல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் 4 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்பிலேயே கட்டட உரிமையாளர்கள் அனுமதி பெறலாம். அதற்கு மேலான பரப்பில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மண்டல அலுவலகம், இயக்குநர் அலுவலகத்தில்தான் அனுமதி பெற வேண்டும்.

மேலும் அனுமதி பெறாமல் கட்டுவது, விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட உயரமாக கட்டுவது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக சேலம் மண்டலத்தில் 80 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகரமைப்புத் திட்டம் தீட்டப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீட்டு மனைகளுக்கு மட்டுமல்லாமல் திட்டத்தில் சேர்க்கப்படாத பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது. மேலும் மின்சார வசதி, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொடுக்க முடியாது. மேலும் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் மொத்த பரப்பளவில் 10 சதவீதத்தை பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும். அத்துடன் போதிய சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மலைப் பிரதேசங்களில் சுமார் 250 சதுர மீட்டர் அளவிலான கட்டடங்கள் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பின் அனுமதியைப் பெற வேண்டும். 300 சதுர மீட்டர் பரப்பளவிலான கட்டடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதியையும், அதற்கும் பெரிய கட்டடங்கள் கட்ட இயக்குநரின் அனுமதியையும் பெற்றுதான் கட்டடங்கள் கட்ட வேண்டும். ஆனால் சில மலைப் பிரதேசங்களில் விதிகளை மீறிய கட்டடங்கள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோல் வனத்துறை, வேளாண்மைத்துறை அனுமதி இல்லாமல் விதிகளை மீறி கட்டிய கட்டடங்களுக்கு சீல் வைக்கவும் அதிகாரம் உள்ளது.

 


Page 30 of 96