Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மாநகராட்சியை குற்றம் சொல்லக்கூடாது அங்கீகாரமற்ற குடியிருப்புகளை அரசு முதலில் வரையறுக்க வேண்டும்

Print PDF

தினகரன்                  02.12.2010

மாநகராட்சியை குற்றம் சொல்லக்கூடாது அங்கீகாரமற்ற குடியிருப்புகளை அரசு முதலில் வரையறுக்க வேண்டும்

புதுடெல்லி, டிச. 2: அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் எல்லைகளை அரசு முதலில் வரையறுக்க வேண்டும். அதன்பின்னர் மாநகராட்சி மீது குற்றம்சாட்ட வேண்டும் என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறினார்.

மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறியதாவது:

அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளை அங்கீகரிப்பதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாநில அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் எல்லைகளை அவர்கள்தான் முதலில் வரையறுக்க வேண்டும். அதைவிட்டு மாநகராட்சி மீது குற்றம்சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது. அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் மேம்பாட்டுக்காக மாநகராட்சிக்கு போதுமான நிதியையும் மாநில அரசு ஒதுக்கவில்லை. அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளை அரசு வரையறுத்துவிட்டால், லேஅவுட் பிளானை மாநகராட்சி இறுதி செய்துவிடும். அதற்கு முன்னதாக மாநகராட்சியால் இதை செய்ய முடியாது.

2010&11ம் ஆண்டில் அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால், இதுவரையில் ரூ.37.50 கோடி மட்டுமே அரசு தந்துள்ளது. 1998ம் ஆண்டில் இதுவரையில் இப்பணிகளுக்காக ரூ.569 கோடியை மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், சட்டசபையில் அரசு சார்பில் அளித்துள்ள பதிலில், இப்பணிகளுக்காக இந்த காலக்கட்டத்தில் ரூ.3,326 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ரூ.2,755 கோடி அவர்கள் வேறு பணிகளுக்கு திருப்பியுள்ளனர் என்பதுதான் உண்மை.

இதேபோல், நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சொத்து வரியில் விலக்களிக்கும் அரசாணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இதுதொடர்பாக 2007 முதல் 2010ம் ஆண்டு வரையில் மாநகராட்சி நிறைவேற்றிய 5 தீர்மானங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை. மூத்த குடிமக்களுக்கு சொத்து வரியில் வழங்கும் தள்ளுபடி சலுகையை பெறும் வகையில், இதற்கான வயது வரம்பை 65ல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும் என்று மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல், பெண்களுக்கும், 100 முதல் 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தங்களது சொந்த இடத்தில் தொழில் செய்யும் மாற்று திறனாளிகளுக்கு 30 சதவீதம் சொத்து வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றார்.

 

சட்டவிரோதமாக நிறுவப்பட்ட 1,600 செல்போன் கோபுரங்களை ஒழுங்குபடுத்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்                29.11.2010

சட்டவிரோதமாக நிறுவப்பட்ட 1,600 செல்போன் கோபுரங்களை ஒழுங்குபடுத்த மாநகராட்சி முடிவு

மும்பை, நவ.29: மும்பையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட 1,600 மொபைல் போன் கோபுரங்களை ஒழுங்கு படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி மும்பையில் 3,489 மொபைல் போன் கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் கோபுரங்கள் கட்டிடங்களின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. பாந்த்ரா, கார், சாந்தாகுரூஸ், விலே பார்லே, அந்தேரி மற்றும் ஜோகேஸ்வரியில் மட்டும் 568 சட்டவிரோத கோபுரங்கள் உள்ளன.

பாந்த்ரா, கார், சாந்தாகுரூசின் கிழக்கு பகுதிகள் அடங்கிய எச்&கிழக்கு வார்டில் 96 கோபுரங்களும், பாந்த்ரா, கார், சாந்தாகுரூசின் மேற்கு பகுதிகள் அடங்கிய எச்&மேற்கு வார்டில் 211 கோபுரங்களும் உள்ளன. இதேபோல விலே பார்லே, அந்தேரி மற்றும் ஜோகேஸ்வரியின் கிழக்கு பகுதிகள் அடங்கிய கே&கிழக்கு வார்டில் 206 கோபுரங்கள் உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி அனுமதியின்றி நிறுவப்படவை ஆகும்.

இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் கட்டிடங்களில் குடியிருப்போருக்கு சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும் என்றும் புற்றுநோய் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே சட்டவிரோதமான இந்த கோபுரங்களை இடித்து தள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. எனவே இவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் மாநகராட்சி இருந்து வந்தது.

இந்த நிலையில் சிவசேனா கவுன்சிலர் மன்மோகன் சோங்கர் கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் சட்டவிரோதமான மொபைல் போன் கோபுரங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் என கோரியிருந்தார். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட மொபைல் கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அவர் கொண்டு வந்த தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள 1,600 சட்டவிரோத கோபுரங்களை ஒழுங்கு படுத்தவும் சம்பந்தப்பட்ட மொபைல் கம்பெனியிடமிருந்து ரூ1லட்சம் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள மொபைல் போன் கோபுரங்களில் 50 சதவீதம் கோபுரங்கள் சட்டவிரோதமானவை என தெரிய வந்துள்ளது.

 

கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட அங்கீகாரமற்ற கட்டிடங்கள் இடிக்கப்படும்

Print PDF

தினகரன்                26.11.2010

கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட அங்கீகாரமற்ற கட்டிடங்கள் இடிக்கப்படும்

புதுடெல்லி, நவ. 26: அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாத தளங்கள் இடித்து தள்ளப்படும் என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்துள்ளார். இதற்காக விதிமீறிய கட்டிடங்களின் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 70 அப்பாவிகள் பரிதாபமாக பலியாயினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழி லாளர்கள். இந்த கட்டிட உரிமையாளர் அம்ரித் பால் சிங்குக்கு 3 மாடி மட்டுமே மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு 5 மாடிகள் வரை கட்டியுள்ளார்.

பலமான அஸ்திவாரம் இல்லாத அந்த கட்டிடம், 5 மாடிகளை தாங்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் உயரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.மெஹ்ரா கூறியதாவது:

மாநகராட்சி எல்லையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் உயரத்தில் இருக்கும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பல பகுதிகளில் டெல்லி மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல பகுதிகளில் 15 மீட்டர் உயரத்துக்கும் கூடுதலாக கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. ஆனால், இந்த விதியை பல கட்டிட உரிமையாளர்கள் மீறியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதுபோன்ற கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளோம்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில், ரூர்கியில் இருந்து வந்த மத்திய கட்டிட ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் கட்டிட மாதிரிகளை எடுத்து ஆராய்ந்து வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் வேறு சில கட்டிடங்களின் அவர்கள் ஆராய்ந்தனர்.

அவர்களிடம் இருந்து அறிக்கை கிடைத்த பின்னர், பலமில்லாத கட்டிடங்களை இடித்து தள்ளுவது உட்பட தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகர் பகுதி ஆய்வை முடித்த பின்னர் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பினர் உதவியுடன் டெல்லி முழுவதும் கட்டிடங்களின் பலத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அனுமதியற்ற கட்டிடங்களின் தளங்களை இடிக்கும்போது, அவற்றுக்கான செலவை கட்டிட உரிமையாளரிடம் இருந்து வசூலிப்பதா அல்லது மாநகராட்சியே அதை தருவதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆணையர் கூறினார்.

மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறும்போது, "அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தளங்கள் இடித்து தள்ளப்படும். அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 


Page 31 of 96