தினமணி 11.05.2010
ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
காரைக்கால், மே 10: காரைக்காலில் குப்பைகளைச் சரியாக அகற்றாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட 12 வார்டுகளில் குப்பைகள் அகற்றும் பணி 12 தனியார் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசு மாதம் ரூ. 9 லட்சத்தை காரைக்கால் நகராட்சிக்கு ஒதுக்குகிறது.
இந்நிலையில், குப்பைகளை அகற்றுவதில் அதிக அலட்சியம் காட்டப்படுவதாகவும், பல்வேறு இடங்களில் குப்பைகள் மேடாக இருப்பதாகவும் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
÷குப்பைகளை அள்ளும் பணி ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்ததால், மே மாதம் முதல் புதிய ஒப்பந்ததாரர்களை நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.
புகார்களின் அடிப்படையில் ஒப்பந்த காலம் முடிந்த 12 ஒப்பந்ததாரர்களுக்கும் ரூ.10 லட்சம் வரை அபராதமாக விதித்து அதனை நகராட்சி செலுத்த வேண்டிய தொகையில் பிடித்தம் செய்து வழங்கியுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
÷புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மீதும் புகார்கள் வந்தால், உடனடியாக அந்த ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க நகராட்சி நிர்வாகம் தயாராகவுள்ளதாக நகராட்சி கவுன்சிலர் ஒருவர் தெரிவித்தார்.
ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி ஆணையர் அலட்சியமாக உள்ளார் எனப் புகார் கூறப்பட்ட நிலையில், ஆணையர் எடுத்த இந்த நடவடிக்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.