தினமலர் 20.05.2010
பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த செட்டிக்கரை பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தர்மபுரி நகராட்சியில் முதல் கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் இப்பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்துக்கு தர்மபுரியை அடுத்த செட்டிக்கரை பஞ்சாயத்து பகுதியில் நீர்உந்து நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் அமுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கட்டுமான பொருட்கள், குழாய்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டு கொண்டார். நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா, கமிஷனர் அண்ணாதுரை, இன்ஜினியர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜ்மோகன் உட்பட பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.