தினமணி 20.05.2010
தேனி பாதாளச் சாக்கடை திட்டம்: தனி அதிகாரிகள் நியமனம்
தேனி, மே 19: தேனியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்த குடிநீர் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் தலைமையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தேனியில் ரூ. 38.66 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு மே 25-ம் தேதி சென்னையில் டெண்டர் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில், பங்களாமேடு பகுதியில் கழிவு நீரேற்றும் நிலையமும், கே.ஆர்.ஆர். நகர் பகுதியில் கழிவுநீருந்து நிலையமும்,கருவேல்நாயக்கன்பட்டியில் கழிவு நீருந்து நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்காக, குடிநீர் வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரத்தினவேலு தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், 2 உதவி பொறியாளர்கள் மற்றும் 15 அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. இக்குழுவினர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.