தினமலர் 25.05.2010
பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணி : மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலை மற்றும் வெங்கடேசபுரம் காலனி ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கலெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
கழிவுநீர் சேகரிப்பு, குழாய்களின் தரம் குறித்தும் அதன் நீளம், அகலம் ஆகியவற்றை அளந்து பார்த்தும் தரத்தையும், குழாய்கள் பதிக்கும் பணிகள், ஆள் நுழைவு தொட்டிகளையும் கலெக்டர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் கலெக்டர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் நகரில் 23.38 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. 30 சதவீத 6.73 கோடி பாய் அரசு மானியமாகவும், 46 சதவீதமாகிய 10.32 கோடி ரூபாயை அரசு கடனாகவும் வழங்கப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்பாகிய 24 சதவீதம் 5.37 கோடி ரூபாயில் இதுவரையில் 1.25 கோடி ரூபாய் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. வீட்டின் அளவிற்கேற்றவாறு பொதுமக்களிடமிருந்து பங்களிப்புத் தொகை பெறப்படுகிறது. இத்திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் பங்களிப்பில் மீதமுள்ள 4.12 கோடி ரூபாய் நகராட்சி மூலமாக கூடிய விரைவில் பெறப்படவுள்ளது. பெரம்பலூர் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் இதுவரை 82 சதவீதம் குழாய்கள் பதிக்கும் பணிகளும், ஆள் நுழைவு தொட்டிகள் கட்டும் பணிகளும் 50 சதவீதம் வீட்டு இணைப்பு குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அரணாரை, விளாமுத்தூர் சாலை அதன் பகுதிகளில் கழிவுநீர் மேலேற்று நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. துறைமங்கலத்தில் பிரதான கழிவுநீர் மேலேற்று நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். இச்சுத்திகரிப்பு நிலையம் தவிர அரசு அட்டவணைப்படி ஜனவரி 2011 முடிய வேண்டிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். டிசம்பர் 2011க்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப்பணிகளும் முடிவுற்று இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை பெரம்பலூர் எம்.எல்.ஏ., நகராட்சி கமிஷனர், இன்ஜினியர்களுடன் ஆய்வு செய்த போது குழாய்களின் தரம், அளவு, நீளம் ஆகியவைகளை அளந்து பார்த்து ஆய்வு செய்ததில் அவை தரமானதாக இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, எம்.எல்.ஏ., ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் அசோக்குமார், கழிவுநீர் அகற்றும் கோட்ட நிர்வாக இன்ஜினியர் ஸ்ரீனிவாசன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மேகலிங்கம், செல்வதுரை, உதவி பொறியாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.