தினகரன் 26.05.2010
அரியலூரில் தரமற்ற உணவு தயாரித்த 11 ஓட்டல்களுக்கு சீல்
அரியலூர், மே 26: அரியலூர் நகரில் தரமற்ற உணவு தயாரித்த 11 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அரியலூர் நகரில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற, பாதுகாப்பற்ற வகையில் உணவுபொருள் தயாரிக்கப்படுவதாக கலெக்டர் ஆபிரகாமுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. ஜீவரத்தினம், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு, பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை மாவட்ட அலுவலர் வேலுசாமி, ஊராட்சி நிர்வாக உதவி இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி தலைமையில் 4 குழுவினர் அரியலூர் நகரில் உள்ள ஓட்டல்களில் நேற்று சோதனையிட்டனர்.
பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, செந்துறை சாலை, மாதாகோவில் சாலை, ரயில்வேகேட், கைலாசநாதர் கோயில் தெருவில் உள்ள 25 ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டது. சுகாதாரமற்ற, பாதுகாப்பு இல்லாமல் உணவு வகைகளை தயாரித்தது மற்றும் சமையல் அறை, உணவு உண்ணும் இடத்தை அசுத்தமாக வைத்திருந்தது, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறாமல் நடத்தியது ஆகியவற்றுக்காக 11 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அபராத தொகையை செலுத்திய பின்னர் கடைகளை சீர்செய்து சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் அனுமதி பெற்ற பின் திறக்க வேண்டுமென ஓட்டல் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வில் தாசில்தார்கள் பாலாஜி, மகேஷ்வரன், மாவட்ட தலைமை மருத்துவர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சண்முகம், நகராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை