தினகரன் 27.05.2010
புழல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் பற்றி அதிகாரிகள் நேரில் ஆய்வு
புழல், மே 27: புழல் மாரியம்மன் நகர், சக்திவேல் நகர், பாலகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தனியார் கம்பெனி, ஆலைகளிலிருந்து வரும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் கூறினர்.
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது பற்றி ‘தினகரன்‘ நாளிதழில் நேற்று படம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர் தென்னரசு, உதவி பொறியாளர் தனபாண்டியன் ஆகியோர் புழல் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
செயல் அலுவலர் நவநீத குமார், பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன் ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மழைநீர் கால்வாய் கட்டுவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவரிடம் கூறினர். பிறகு, புழல் மத்திய சிறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரையும் அவர்கள் ஆய்வு செய்தனர். கழிவுநீர் வெளியேறாமல் நடவடிக்கை எடுக்க சிறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டனர்.