தினமணி 31.05.2010
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய இடம்: அமைச்சர் ஆய்வு
சிவகங்கை, மே 30: இளையான்குடி பேரூராட்சிக்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் பார்வையிட்டார். பேரூராட்சிக்குள்பட்ட மாணிக்கவாசகர் நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு கருவி நிறுவப்பட உள்ளது.
இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இளையான்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன் ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். இதையடுத்து, சுத்திகரிப்பு கருவியை நிறுவ சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதன்பேரில், இளையான்குடிக்கு வருகை தந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.என். மைதீன்கான், சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர், இதற்கான அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, அமைச்சருடன் சுப. மதியரசன் எம்.எல்.ஏ., பேரூராட்சித் தலைவர் பி.ஏ. நஜிமுதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு. முருகானந்தம், கவுன்சிலர் டி.எம்.ஏ. யாசின், கிராம நிர்வாக அலுவலர் அங்குசாமி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.