தினமணி 07.06.2010
பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
போடி, ஜூன், 6: போடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் கண்காணித்து கடைகளில் விற்பனை செய்தால், பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந் நிலையில், சிலர் இவற்றை வீடுகளில் பதுக்கி வைத்து, தேவைப்படும்போது கடைகளுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்தும், பயன்படுத்தியும் வந்தனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இதில் குலாலர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், தியாகராஜன் ஆகியோர் அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.40 ஆயிரம். இதுகுறித்து ஆணையர் தெரிவித்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது எச்சரிக்கை விடப்பட்டு பொருள்களை மட்டும் பறிமுதல் செய்கிறோம். இனி இவற்றை விற்பவர்கள மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்றார்.