தினகரன் 07.06.2010
அனுமதி பெறாமல் வீட்டுமனை விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனைகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முறையான அனுமதிபெறாமல் சட்டவிரோதமாக வீட்டுமனைகள் விற்கப்படுகின்றன. மனைகள் விற்பனை செய்யும் முன் நகர்ப்புற ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதியுடன், சம்பந்தபட்ட பஞ்சாயத்து அனுமதியும் பெறவேண்டும்.
மேலும் மனைபிரிவு அமைக்கும் இடத்தின் மொத்த பரப்பளவில் 10 சதவீத இடத்தை பாதை நீங்கலாக பொதுக்காரியங்களுக்காக பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்கவேண் டும். இந்த அரசு உத்தரவை மீறி நிலத்தை விற்பனை செய்தவர்களுக்கு பஞ்சாயத்து மூலம் கட்டிட வரை பட அனுமதியும், குடிநீர் இணைப்பு மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரமுடியாது.
நகர்ப்புற ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதியும், ஊராட்சி நிர்வாக அனுமதியும் பெற்ற வீட்டுமனைகளில் பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி நிலங்கள் மறுபடியும் மாற்றி மோசடியாக விற்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட விபரங்களை வீட்டுமனை விற்பவர்களிடம் பெற்று அவை சட்டப்படியானதா என்பதையும் உறுதிப்படுத்தி வீட்டுமனைகளை பதிவு செய்யவேண்டும்.
மனைகளை விற்கும் போது நகர்ப்புற ஊரமைப்புத்துறை மற்றும் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.