தினகரன் 09.06.2010
ஜெயங்கொண்டத்தில் சுகாதாரமின்றி இயங்கிய 12 உணவகங்களுக்கு சீல்
ஜெயங்கொண்டம், ஜூன் 9: ஜெயங்கொண்டத்தில் சுகாதாரமின்றி இயங்கிய 12 உணவகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள், டீ கடைகள், சிற்றுண்டி சாலைகள் நடத்தப்படுவதாக அரியலூர் கலெக்டருக்கு புகார் வந்தது. உடனடியாக கடைகளை தணிக்கை செய்ய சுகாதாரத்துறை மற்றும் நகராட்சியினருக்கு கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார். மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லட்சுமிதரன் தலைமையில் ஜெயங்கொண்டம் நகராட்சி செயல் அலுவலர் மோகன், சுகாதார மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், ராஜ்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை எழுத்தர் பாலசுப்ரமணியன் உட்பட்ட குழுவினர் ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலை, சிதம்பரம் சாலை, திருச்சி சாலை போன்ற பகுதியில் உணவகங்கள், டீ கடைகள், சிற்றுண்டி கடைகளில் அதிரடி தணிக்கை மேற்கொண்டனர். 31 கடைகளில் ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 12 கடைகளுக்கு சீல் வைத்தனர். சுகாதார நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்