தினமணி 17.06.2010
டி.வி.எஸ். நகர் பூங்கா பணிகள்: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
மதுரை, ஜூன் 16: மதுரை டி.வி.எஸ். நகர் பூங்கா பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்து இப்பூங்கா அமைக்கப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. பூங்காவை பார்வையிட்ட கமிஷனர், செய்தியாளர்களிடம் கூறியது:
பணிகள் முடிவுற்று வரும் 19-ம் தேதி இப்பூங்கா அமைச்சர் அழகிரியால் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா லிமிடெட் நிர்வாக இயக்குநர் சோபனா ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். டி.வி.எஸ். சன்ஸ் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் தினேஷ் ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.
பெங்களூரிலிருந்து செடிகள் மற்றும் புல்வெளிகள் கொண்டுவரப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நீரூற்றுகள், நடைபாதை மேடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், மின் விளக்குகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வுப் பணியின்போது தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.