தினகரன் 17.06.2010
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் விதிமுறை மீறி கட்டிய அடுக்குமாடிக்கு சீல்
சென்னை, ஜூன் 17: ஒக்கியம் துரைப்பாக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
சென்னை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் தேவராஜ் நகர் (பழைய மகாபலிபுரம் சாலை அருகில்) குமரன் குடில் 2வது தெருவில் 40, 41 மற்றும் 42 ஆகிய மனை எண்களில் தனித்தனியாக வாகன நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு கட்டிடத்தின் உரிமையாளர் திட்ட அனுமதி பெற்றிருந்தார்.
ஆனால், மூன்று மனைகளையும் ஒன்று சேர்ப்பதற்கான அனுமதி பெறாமல் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட சிறப்புக் குடியிருப்புக் கட்டிடத்தை 20 அடி & 67 அடி அளவிலான சாலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடத்தை கட்டியிருக்கிறார்.
மேலும், வாகனம் நிறுத்தும் தளத்துக்கான பகுதியை குடியிருப்பாக மாற்றியிருக்கிறார். இந்த கட்டிடத்தில் கூடுதல் தளம், வாகன நிறுத்தம், பக்க இடைவெளிகள், குடியிருப்புகளின் எண்ணிக்கை ஆகியவை சம்பந்தப்பட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, இந்த கட்டிடம் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.