தினமணி 18.06.2010
நெல்லையில் இனிப்புக் கடை கிட்டங்கிக்கு சீல்
திருநெல்வேலி,ஜூன் 17: திருநெல்வேலியில் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியதாக இனிப்புக் கடை கிட்டங்கிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபல இனிப்புக் கடைக்கு சொந்தமான கிட்டங்கி, கைலாசபுரம் நடுத் தெருவில் உள்ளது. இந்தக் கிட்டங்கி மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக அப் பகுதி மக்கள், மாநகராட்சியில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சுகாதாரத் துறையினர், அந்த கிட்டங்கியில் திடீர் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் அந்த கிட்டங்கி மிகவும் சுகாதார கேட்டுடன் செயல்படுவதும், அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிட்டங்கி உரிமையாளர் கமாலுதீனுக்கு, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறும் கமாலுதீனுக்கு 3 முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், 3 முறையும் கமாலுதீன் ஆஜராகவில்லை. அந்த கிட்டங்கியும் சீரமைக்கப்படவில்லையாம். இந்நிலையில், தச்சநல்லூர் உதவி ஆணையர் சுல்தானா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், அந்த கிட்டங்கிக்கு சீல்வைத்தனர்.