தினகரன் 21.06.2010
ஹுமாயூன் சமாதி வளாகத்தில் ஓட்டல், கடைகளுக்கு மாநகராட்சி சீல்
புதுடெல்லி, ஜூன் 21: ஹுமாயூன் சமாதி வளாகத்தில் ஒரு ஓட்டல், புரானா கிலா ஏரிக்கரையோரம் ஒரு ஓட்டல் மற்றும் கடைகளுக்கு மாநகராட்சி, தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.
டெல்லியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக கண்காணிப்புக்குழு ஒன்றை அண்மையில் உச்சநீதிமன்றம் நியமித்தது.
அக்குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், செங்கோட்டை வளாகத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த ரெஸ்டாரெண்டுகளுக்கு கடந்த 18ம்தேதி சீல் வைக்கப்பட்டது.
கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அந்நடவடிக்கையை மேற்கொண்டனர். மறுநாளான நேற்று முன்தினம் மிருகக்காட்சி சாலையின் முன்புறம் அங்கீகாரம் இன்றி அமைக்கப்பட்டிருந்த ஜூஸ் கடைக்கு சீல் வைத்தனர். புரானா கிலா ஏரியின் கரையோரத்தில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த ஒரு ஓட்டலுக்கும், கூரை வேயப்பட்ட குடிசையில் இயங்கி வந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும், ஹுமாயூன் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். சமாதியை அடுத்து, ஓட்டல் ஓபராய் எதிரில் அமைக்கப்பட்டிருந்த 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.