தினகரன் 20.07.2010
தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
தூத்துக்குடி, ஜூலை 20: தூத்துக்குடி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமாக பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் கடைகளுக்கு வாடகையே கொடுக்காமல் இருந்து வந்தனர். கடந்த பத்து மாதங்களாக வாடகை பாக்கி தராத கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று எச்சரித்தனர்.
இருப்பினும் சிலர் வாடகை கொடுக்கவில்லை. இதையடுத்து வாடகை தராத 6 கடைகளை நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே வியாபாரிகள் பலர் தாங்களாகவே முன்வந்து வாடகை பாக்கியை செலுத்தினர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.8 லட்சம் வசூலானது. வாடகை பாக்கியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.