தினமணி 23.07.2010
எரிவாயு மயான கட்டுமானப் பணிகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு
திண்டுக்கல், ஜூலை 22: திண்டுக்கல் வேடபட்டியில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடைப் பணிகளை, நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேடபட்டியில் அரசு சார்பில் ரூ.20 லட்சம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 5 லட்சம், நகராட்சி நிதி மூலம் ரூ. 85 லட்சம் என மொத்தம் ரூ.1.1 கோடி செலவில் எரிவாயு மயானம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் நடராஜன், ஆணையர் அர. லட்சுமி, பொறியாளர் ராமசாமி, உதவிப் பொறியாளர் வெற்றிச் செல்வி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் கூறுகையில் 2 ஏக்கர் பரப்பில் எரிவாயு மயானக் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் தியான மண்டபம், நவீன கழிப்பறை, குளியலறை அமைக்கப்பட்டு வருகிறது.
கட்டுமானப் பணிகளை எந்தவொரு குறைபாடுமின்றி விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர்.