தினகரன் 23.07.2010
மாநகராட்சியின் புதிய கட்டிடம் மழையால் பெரும் பாதிப்பு விசாரணை நடத்த உத்தரவு
புதுடெல்லி,ஜூலை 23: மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் மழையால் பாதிக்கப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சிக்கு ரூ.650 கோடி செலவில் 28 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று இந்த கட்டிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். மே மாதம் முதல் மாநகராட்சி, இந்த அலுவலகத்தில்தான் செயல்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மாநகராட்சியின் புதிய கட்டிடத்தின் தரை தளத்திலும் தண்ணீர் தேங்கியது. சுவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மழை நீர் ஒழுகியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது.
இந்த நிலையில், மாநகராட்சியின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, மாநகராட்சி கட் டிடம் கட்டப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர், நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறுகையில்,‘இது பற்றி விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தர மாநகராட்சி தலைமை இன்ஜினியர் ரவிதாசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளில் முறைகேடு நடந்திருப்பது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.