தினகரன் 23.07.2010
சென்னைக்கு குடிநீர் சப்ளை ஓய்வு பெற்ற பொறியாளர் குழு மேட்டூர் அணையில் ஆய்வு
மேட்டூர், ஜூலை 23: மேட்டூர் அணையில் இருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான மதிப்பீடு மற்றும் சர்வே பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மேட்டூர் வந்தனர்.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் எந்த இடத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்தால் வறட்சி காலங்களில் கூட தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விசைப்படகில் நீர்த்தேக்க பகுதியில் சுமார் 20 கி.மீ. தொலைவிற்கு சென்று ஆய்வு செய்தனர். அணையில் தற்போது உள்ள நீர் நிலவரம், எவ்வளவு சகதி தேங்கி உள்ளது என்பது குறித்து நீண்ட நேரம் ஆய்வுக்கு பின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர். இதற்கான செலவுத் தொகை குறித்தும் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி, தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.