தினமணி 26.07.2010
குடியிருப்பு திட்ட வீடுகள் பேரூராட்சிக்கும் நீட்டிக்க தீர்மானம்
களியக்காவிளை, ஜூலை 25: இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்புத் திட்ட வீடுகள், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை பேரூராட்சிக்கும் நீட்டிப்புச் செய்ய வேண்டும் என களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சலாவுதீன் முன்னிலை வகித்தார்.
இக் கூட்டத்தில், 8-ம் வார்டு உறுப்பினர் என். விஜயேந்திரன், இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்புத் திட்ட இலவச வீடுகளும், ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகளும் அனைத்துப் பகுதி ஏழைகளுக்கும் பயன்பெறும் வகையில், பேரூராட்சிகளுக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும். இல்லையேல், பேரூராட்சிகளை கிராம ஊராட்சியாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீர்க் குழாய்களை நீட்டிப்பு செய்தல், சாலை மேம்பாடு செய்தல் மற்றும் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கியமான சாலை சந்திப்புகளில் 2 சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், உறுப்பினர்கள் விஜயானந்தராம், என். குமார், ரமா, என். விஜயேந்திரன், ராயப்பன், வின்சென்ட், எம்.எஸ்.ஏ. கமால், தேவராஜ், ஜெலின் பியூலா, அ. ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.