Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 28.07.2010

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

திருச்சி: ஆடி 18 முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை பகுதியில் மாநகராட்சி மூலம் நடந்து வரும் முன்னேற்பாடு பணியை மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு செய்தனர்.ஆடி பெருக்கை கொண்டாட திருச்சி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் காவிரி ஆற்றுக்கு வருவர். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடி 18 விழாவுக்கு மாநரகாட்சி சார்பில், சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மாநகராட்சி அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் மூன்றாம் தேதி (ஆடி 18) ஆடிப்பெருக்கு முன்னிட்டு திருச்சி, அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து புனித நீராட காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, சிந்தாமணி படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை ஆகிய இடங்களில் திருச்சி மாநகராட்சி மூலம் சுகாதாரம், விளக்கு வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேற முன்னேற்பாடு வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.அம்மாமண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணியை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.ஆடி 18 அன்று சுகாதார பணியாளர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்தி பணி மேற்கொள்ள வேண்டும். அம்மாமண்டபம், ஓடத்துறை படித்துறை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். கூடுதலாக அவ்விடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பக்தர்கள் புனித நீராடும் இடங்களில் ஆடி 18 அன்று மட்டும் உள்ளூர் மக்கள் துணி துவைக்க அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.ஆய்வின் போது, செயற்பொறியாளர் அருணாச்சலம், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் குமரேசன், உதவி கமிஷனர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன், கவுன்சிலர் கிருஷ்ணவேணி, உதவி செயற்பொறியாளர்கள் லட்சுமணமூர்த்தி வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.