தினமணி 28.07.2010
ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள்: மாநகர மேயர் ஆய்வு
திருச்சி, ஜூலை 27: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறைப் பகுதிகளில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் சிறப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் காவிரியில் புனித நீராட வருவார்கள். இதற்காக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, சிந்தாமணி படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை ஆகிய இடங்களில் மாநகராட்சியின் மூலம் சுகாதாரம், விளக்கு வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அம்மாமண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தõ. பால்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுகாதாரப் பணியாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தவும், சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்கவும், கூடுதலாக மின் விளக்கு ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆக. 3-ம் தேதி மட்டும் உள்ளூர் மக்கள் துணி துவைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் த. குமரேசன், உதவி ஆணையர் பி. பாஸ்கர், மாமன்ற உறுப்பினர் கே. கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.