தினமணி 01.08.2009
உதயகிரி கோட்டை மான் பூங்காவை நகராட்சியிடம் ஒப்படைக்க கோரிக்கை
தக்கலை, ஜூலை 31: கன்னியாகுமரி மாவட்டம், வருவாய்த் துறை- வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள உதயகிரி கோட்டை மான் பூங்காவைநகராட்சி வசம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பத்மநாபபுரம் நகராட்சித் தலைவர் அ. ரேவன்கில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பத்மநாபபுரம் நகராட்சி பகுதி சுமார் 6.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது.
இந்நகராட்சி தமிழக அரசால் புரதான நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்குள்பட்ட புலியூர்குறிச்சி பகுதியிலுள்ள உதயகிரி கோட்டை மான் பூங்காவை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கின்றனர்.
இக்கோட்டையை 17-ம் நூற்றாண்டில் அன்றைய திருவிதாங்கூர் படைத் தளபதியாக விளங்கிய கேப்டன் டிலனாய் நவீனப்படுத்தினார்.
டிலனாய் கல்லறையும் இங்கு அமைந்துள்ளது.
தற்போது வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள உதயகிரிக்கோட்டை மான் பூங்கா மாவட்ட வனத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உதயகிரி கோட்டை மான்பூங்காவை பத்மநாபபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் பராமரிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் ஆகும்.
இதன்மூலம் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் நகராட்சிப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரேவன்கில்.