தினமலர் 30.07.2010
சொத்துவரி, குடிநீர் கட்டணம் பாக்கி:குடிநீர் இணைப்பு துண்டிக்க எச்சரிக்கை
திருநெல்வேலி:சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பாளை., மாநகராட்சி உதவிக்கமிஷனர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாளை., மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் மாநகராட்சி கடைகளுக்கான குத்தகை வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 31ம் தேதி வரையுள்ள காலத்திற்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் நிலுவைத் தொகை வைத்துள்ள கட்டடதாரர்கள் பாக்கியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ளவேண்டும். 2010-11 முதல் அரையாண்டிற்கான வரித் தொகையினை வரும் ஆக.15ம் தேதிக்குள் செலுத்தாத கட்டங்களுக்கான குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மாநகராட்சி கடைகளில் 3 மாதங்களுக்கு மேலாக குத்தகை தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகளுக்கான குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு ஏலத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாளை., உதவிக்கமிஷனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.