தினமலர் 30.07.2010
ஆக்கிரமிப்பு குடோன், வீடு இடிப்பு அதிகாரிகள் அதிரடி பாடம்
கோவை : செல்வபுரம் அருகே, நொய்யல் ஆற்றிலிருந்து உக்கடம் பெரியகுளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்திருந்த கட்டடங்கள் நேற்று இடித்து அகற்றப் பட்டன.செல்வபுரம் திருநகர், 2வது மற்றும் 3வது வீதிகளை இணைக்கும் பகுதியில் நீர்வழிப்பாதை முன்பு இருந்தது. அவ்வழியே நீர் செல்வதில் தடை ஏற்பட்டதால் தற்போது மாற்றுப்பாதையில் செல்கிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மட்டும் திருநகர் பகுதிக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் தண்ணீர் திருப்பிவிடப்படும். இதனால், முன்பு நீர்வழிப்பாதையாக இருந்த பகுதியை அப்பகுதியினர் பாதையாக மாற்றிவிட்டனர். சிலர், இப்பாதை இருக்கும் இடம் நீர்வழி புறம்போக்கு என்பதை தெரிந்து கொண்டு ஆக்கிரமிப்பில் இறங்கினர். கட்டடங்களும் கட்டப்பட்டு குடோன்கள் மற்றும் வீடுகளை எழுப்பினர். மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றதை தொடர்ந்து நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிங்கிரி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிப்பு இடத்தை நேற்று ஆய்வு செய்து, குடோன்கள் மற்றும் வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். அதிகாரிகளின் இந்நடவடிக்கை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாடமாக அமையுமென அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.