தினகரன் 30.07.2010
சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை
தர்மபுரி, ஜூலை 30: தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை எடுக்குப்படும் என்று செயல் அலுவலர் நாகராஜன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் முதல் நிலை பேரூராட்சியில் வசிப்பவர்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 3 தினங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை வரி விதிப்புதாரர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 1920ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 36வது பிரிவின்படி முதல் அரையாண்டின் சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2வது அரையாண்டின் சொத்து வரியை அக்டோபர் 30ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
2010&2011 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்தும் காலவரையறை 30.04.2010ம் தேதி முடிவடைந்தது. இதன் பின்னரும் பலர் சொத்துவரியை செலுத்தவில்லை. அவ்வாறு வரி செலுத்தாத கட்டிட உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போர், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.
சொத்து வரியை செலுத்த தவறுபவர்கள் மீது ஜப்தி உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வீட்டின் உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பொருந்தும். இவ்வாறு நாகராஜன் தெரிவித்துள்ளார்.