தினகரன் 30.07.2010
பசை தடவி சுவர்களில் டிஜிட்டல் பேனர் ஒட்டினாலும் நடவடிக்கை மேயர் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 30: கட்டிடங்களின் சுவர்களில் பசை தடவி ஒட்டப்படும் விளம்பர பேனர்களை மாநகராட்சி அகற்றும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது.
அதன்பின்னர், மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
புளியந்தோப்பு, ஐஸ் அவுஸ், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் குப்பையை அகற்றி அழுத்தி எடுத்துச் செல்லும் சிறிய காம்பாக்டர்கள் உட்பட 93 காம்பாக்டர்கள் ணீ 19.79 கோடியில் புதிதாக வாங்கப்படவுள்ளது. இந்த வாகனங்கள் 2 வருட இயக்குதல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்துடன் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆலந்தூர் சாலையில் ஒரு கோடி ரூபாய் செலவில் நவீன குப்பை மாற்று நிலையம் கட்டப்படவுள்ளது.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 4,250 மீட்டர் நீளத்தில் வேலி சுவர் கட்டப்படும். கவுன்சிலர்களுக்கு ணீ 81 லட்சம் செலவில் பிரிண்டருடன் கூடிய லேப்&டாப் வழங்கப்படும்.
கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் மண்டலத்துக்கு ஒன்று வீதம் ‘ஆற்றல் சார் பள்ளிகள்’ உருவாக்கப்படவுள்ளது. இப்படி மாநகராட்சி மேற்கொள்ள இருக்கும் 60 பணிகளுக்கான தீர்மானங்கள் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்டிடங்களின் மீதும், சாலைகளின் சந்திப்புகளிலும் பெரிய, பெரிய விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன.
சென்னையில் தற்போது விளம்பர போர்டுகள் புதிய உருவத்தில் வருகிறது என்று மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி தெரிவித்தார். கட்டிடங்களின் சுவர்களில் பசையை தடவி பெரிய டிஜிட்டல் விளம்பர பேனர்கள் ஒட்டப்படு கிறது.
இது போன்ற விளம்பரங்களை வைத்துள்ள கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும். அப்படியில்லை என்றால் மாநகராட்சி அகற்றும். அதற்கான கட்டணமும் அவர்களிடமே வசூலிக்கப்படும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.