தினமணி 02.08.2010
துணை முதல்வர் பங்கேற்கும் விழா மேடை: கடையநல்லூரில் ஆட்சியர் ஆய்வு
கடையநல்லூர், ஆக. 1: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையநல்லூர் நகராட்சியின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பீட்டர்அல்போன்ஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, முழு மானியத்தில் ரூ.21.5 கோடி மதிப்பீட்டில் கடையநல்லூரில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதன் துவக்க விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கக்கன் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இம்மாதம் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டு மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன், எம்எல்ஏக்கள் பீட்டர்அல்போன்ஸ், கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், ஒன்றியத் தலைவர்கள் காமராஜ், சட்டநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வராஜ், மாரியப்பன், புலவர் செல்வராஜ், அய்யாத்துரை, திமுக ஒன்றியச் செயலர் காசிதர்மம்துரை, நகரச் செயலர் முகம்மதலி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.