தினகரன் 03.08.2010
மேற்கு அண்ணாநகரில் சுகாதாரம் இல்லாத டாஸ்மாக் பாருக்கு சீல்
சென்னை, ஆக. 3: மேற்கு அண்ணாநகர் 13வது மெயின்ரோடு நேரு நகர் முதல் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதற்கு அருகில் முருகன் என்பவர் ‘பார்‘ நடத்தி வருகிறார். இங்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக இல்லாததுடன், அந்த பகுதி முழுவதும் சிறுநீர் கழிக்கப்பட்டு அசுத்தமாக உள்ளதாக புகார் கூறப்பட்டது.
கடந்த 2 மாதத்துக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் அந்த ‘பார்‘ உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மீண்டும் மாநகராட்சி சார்பில் நோட்டீசு தரப்பட்டது.
அடுத்த கட்டமாக கீழ்ப்பாக்கம் கூடுதல் சுகாதார அதிகாரி பிரபாவதி தலைமையில் சுகாதார அலுவலர்கள் அந்த டாஸ்மாக் பாருக்கு நேற்று சென்று ‘சீல்’ வைத்தனர்.