தினகரன் 05.08.2010
குளம், கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுபவர்கள் மீது நடவடிக்கை
மதுரை, ஆக. 5: மதுரையில் குளம் மற்றும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காமராஜ் எச்சரித்தார்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பணியை கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்து பேசுகையில், ‘மாவட்டம் முழுவதும் துப்புரவு பணி நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
வரும் 10ம் தேதி ஒத்தக்கடை ஊராட்சியில் நடைபெறும் தூய்மை பணி முகாமில் 1500 பேர் ஈடுபடுகின்றனர். குளங்கள், கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால் மாசு ஏற்படுவதுடன் சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்Ó என்றார். திட்ட அலுவலர் தங்கவேல், ஊராட்சி உதவி இயக்குநர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.