தினகரன் 06.08.2010
இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் வாரச்சந்தை உரிமம் ரத்து நகராட்சி நிர்வாகம் தகவல்
புதுக்கோட்டை, ஆக. 6: புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறைகள், வாரச்சந்தை, தினசரி சந்தையில் இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி தலைவர் ராமதிலகம் உடையப்பன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நகராட்சி நிர்வாகத்தில் உள்ள வாரச்சந்தை, தினசரி சந்தை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கட்டண கழிப்பறைகளின் நகராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட கட்டணத்தைவிட இரட்டிப்பு கட்டணம் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
முதல்வர் கருணாநிதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்னல்களை போக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்தாலும் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஒரு கிலோ அரிசி ரூ.1, மளிகை சாமான்கள் ரூ.50க்கு வழங்கி வருகிறார். எனவே நகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்டு, கட்டண கழிப்பறை, வாரச்சந்தை, தினசரி சந்தை ஏலம் எடுத்த ஒப்பந்தகாரர்கள் வணிக நோக்கில் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களுக்கு இன்னலை உண்டாக்கி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் ஒன்றுக்கு ரூ.2 மற்றும் மொபட்டுக்கு ரூ.4 வீதம் 24 மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம். கட்டண கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க ரூ.1, மலம் கழிக்க ரூ.2. எனவே சைக்கிள் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறை மற்றும் வாரச்சந்தை தினமும் சந்தை ஆகிய இனங்களின் பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் நகராட்சி தலைவரிடமோ, ஆணையரிடமோ நேரில் புகார் தெரிவிக்கலாம். குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர் உரிமம் எவ்வித முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் ராமதிலகம் தெரிவித்துள்ளார்.