தினமணி 11.08.2010
தஞ்சையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
தஞ்சாவூர், ஆக. 10: தஞ்சை நகரில் நகராட்சி நிர்வாக இயக்குநர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டு நிறைவு விழா வருகிற செப்டம்பர் 25, 26-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், தஞ்சை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை தஞ்சை வந்தனர்.
நகரின் பிரதான சாலைகளை விரிவுப்படுத்துதல், நடைபாதைகளை செப்பனிடுதல், பூங்காக்களை அழகுப்படுத்துதல், தேவையான இடங்களில் பொது கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி, அதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தனர்.
இதற்காக இக் குழுவினர் பெரிய கோயில், சிவகங்கை பூங்கா, தொல்காப்பியர் சதுக்கம், மணி மண்டபம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளைப் பார்வையிட்டனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் த. நடராஜன் கூறியது:
தஞ்சை நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சாலைகளை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட நகரை அழகுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு தேவையான நிதி குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம் என்றார் நடராஜன்.