தினமணி 13.08.2010
தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்
திருப்பூர், ஆக. 12: மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என்று, மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, தாராபுரம், 15 வேலம்பாளையம், நல்லூர், பல்லடம், வெள்ளக்கோவில் ஆகிய 6 நகராட்சிகளிலும் சுமார் 2,500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இம் மாவட்ட மக்களின் முழுசுகாதாரம் காத்திட இன்னும் ஆயிரக் கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போதுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினருக்கு வசிப்பிடம், உரிய ஊதியம், சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியூ) குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அச் சங்கச்செயலர் கே.ரங்கராஜன் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:
தற்போது திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பாதிக்கு மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், சுயஉதவிக் குழு தொழிலாளர்களாக வும் இருப்பதால், அவர்களுக்கு நாள் ஊதியமாக | 50 முதல் | 100 மட்டுமே வழங்க ப்படுகிறது. தற்போதைய விலைவாசியில் ஒருநாள் ஊதியமாக | 100 பெற்றுக்கொண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் குடும்பம் நடத்துகின்றனர்.
பல ஆண்டுகளாக சுயஉதவிக் குழு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை இந்திய அரசின் தலைமை தொழிலாளர் துறை ஆணைய உத்தரவுப்படி தினக்கூ லியாக உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சமாக மாநகராட்சியில் | 244ம், நகராட்சியில் | 186ம் அளிக்க வேண்டும்.
மேலும், துப்புரவுப் பணியிடங்களை மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.