தினகரன் 19.08.2010
வரி பாக்கியை செலுத்தாததால் கரன்சி அச்சகத்துக்கு ரூ.240 கோடி அபராதம்
நாசிக், ஆக. 19: நாசிக் கரன்சி அச்சகத்துக்கு மாநகராட்சி ரூ.240 கோடி அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அச்சகம், நாசிக் மாநகராட்சிக்கு ரூ.24 கோடி ஆக்ட்ராய் வரி பாக்கி வைத்துள்ளது. இதை செலுத்த தவறியதற்காக ரூ.240 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நாசிக் மாநகராட்சி கமிஷனர் பாஸ்கர் சனாப் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு மார்ச் முதல் 2010ம் ஆண்டு மார்ச் வரை ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.795.98 கோடி மதிப்புள்ள உயர் தர காகிதங்களை நாசிக் அச்சகம் இறக்குமதி செய்துள்ளது. இதற்கு நுழைவு வரியாக ரூ.24 கோடி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த வரி செலுத்தப்படவில்லை.
இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரி செலுத்தப்படவில்லை. எனவே, செலுத்த வேண்டிய வரிக்கு நிகராக பத்து மடங்கு தொகை, அதாவது ரூ.240 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு சனாப் கூறினார்.