தினகரன் 19.08.2010
டெங்கு காய்ச்சல் பரவியுள்ள ஜாமியா நகரில் மேயர் ஆய்வு மக்கள் எதிர்ப்பால் பாதியில் ரத்து
புதுடெல்லி, ஆக.19: டெங்கு காய்ச்சல் அதிகம் பரவியுள்ள ஜாமியா நகரில் மேயர் சகானி நேற்று ஆய்வு செய்தார். ஆனால், மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆய்வை பாதியிலேயே ரத்து செய்து மேயர் திரும்பினார்.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஜாமியா நகர் பகுதியில்தான் இந்த காயச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாமியா மற்றும் ஒக்லா பகுதியில் டெங்குவுக்கு 15 பேர் இறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், டெல்லியில் டெங்குவுக்கு இதுவரை 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
ஜாமியா மற்றும் ஒக்லா பகுதியில் கழிவு நீர் தேங்கி, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதே டெங்கு பரவ காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இப்பகுதியில் சுகாதாரப் பணியை விரைவுப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளை ஆய்வு செய்யவும் மாநகராட்சி மேயர் பிரிதிவிராஜ் சகானி முடிவு செய்தார். மாநகராட்சி அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா மற்றும் அதிகாரிகளுடன் ஜாமியா நகருக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு சகானி சென்றார். அப்பகுதி மக்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கினர்.
கவுன்சிலர் முகமது ஜமாலுதின், வாய்க்கால்கள் தூர் எடுக்காமல் கழிவு நீர் தேங்கியிருப்பது பற்றி மேயரிடம் கூறினர். வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு மாநகராட்சி அவை முன்னவர் ஆர்யா கூறுகையில்,‘இப்பகுதியில் உள்ள வாய்க்கால், உ.பி. மாநில பாசனத்துறைக்கு சொந்தமானது. அதனால், அதை தூர் வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள முடியாது’ என்றார்.
இதை அப்பகுதி மக்கள் ஏற்கவில்லை, மேயரையும் மாநகராட்சியையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதிகாரிகளு க்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடிதடி ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆய்வு பணி யை பாதியிலேயே ரத்து செய்து விட்டு மேயர் சகானி திரும்பினார். மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி மேயரின் உருவ பொம்மையை எரித்தனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘ஜாமியா நகரில் குப்பைகளும், கட்டுமான கழிவுகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் நகரமாகவே ஜாமியா நகர் மாறிவிட்டது. 2 லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு 18 துப்புரவு தொழிலாளர்தான் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த கால்வாய் உபி. மாநிலத்துக்கு சொந்தமானது என்றாலும், மாநகராட்சி தனது சொந்த செலவில் தூர்வாரி வந்தது. ஆனால், இப்போது நிதி பற்றாகுறையால் இந்தப் பணியை மேற்கொள்ள மாநகராட்சி மறுக்கிறது’ என்றனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘ஜாமியா நகரில் குப்பைகளும், கட்டுமான கழிவுகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் நகரமாகவே ஜாமியா நகர் மாறிவிட்டது. 2 லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு 18 துப்புரவு தொழிலாளர்தான் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த கால்வாய் உபி. மாநிலத்துக்கு சொந்தமானது என்றாலும், மாநகராட்சி தனது சொந்த செலவில் தூர்வாரி வந்தது. ஆனால், இப்போது நிதி பற்றாகுறையால் இந்தப் பணியை மேற்கொள்ள மாநகராட்சி மறுக்கிறது’ என்றனர்.