Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பஞ்சப்பூரில் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ஆய்வு

Print PDF

தினமணி 19.08.2010

பஞ்சப்பூரில் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ஆய்வு

திருச்சி, ஆக. 18: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் கே. அசோக் வர்தன் ஷெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்க மாநகராட்சி மாமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சப்பூரில் இதற்கென ஏறத்தாழ 200 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கே. அசோக் வர்தன் ஷெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவரிடம் பேருந்து நிலையத் திட்டத்துக்கான வரைபடம் விளக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கான உரிய முன்மொழிவுகளை அரசுக்கு வைக்க, அதிகாரிகளுக்கு அசோக் வர்தன் ஷெட்டி அறிவுரை வழங்கினார்.

பின்னர், காந்தி சந்தையிலிருந்து மொத்த வியாபாரக் கடைகளை மட்டும் அரியமங்கலம் பால்பண்ணை அருகே மாற்றும் திட்டத்துக்கான இடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

மேலும், கருமண்டபத்தில் | ரூ1.49 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ள நவீன எரிவாயு தகனமேடையையும், ஜி.கார்னரில் |ரூ 1 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ள நவீன இறைச்சிக் கூடத்தையும் ஷெட்டி பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் ப. செந்தில்குமார், நகராட்சி நிர்வாக இயக்கக தலைமைப் பொறியாளர் ஆர். ரகுநாதன், மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 19 August 2010 10:18