தினமணி 21.08.2010
தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.100 அபராதம்
நாகர்கோவில், ஆக. 20: நாகர்கோவில் நகர தெருக்களிலும், வீதிகளிலும் குப்பைகளைக் கொட்டினால் ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகர்மன்ற அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் அ. சைமன்ராஜ் தலைமை வகித்தார். நாகர்கோவில் நகர்நல அலுவலர் போஸ்கோ ராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், நகர்மன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். நகரில் குப்பைகளைக் கொட்டும் விவகாரம் தொடர்பாக, கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 1.1.2011 முதல் நாகர்கோவிலில் தெருக்களிலும், வீதிகளிலும், கழிவு நீரோடைகளிலும் குப்பைகளைக் கொட்டும் தனிநபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் முதற்கட்டமாக |100 அபராதம் விதிக்கவும், 2-ம் கட்டமாக தனிநபர்களுக்கு |500-ம், வணிக நிறுவனங்களுக்கு |1000-ம் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காய்ச்சல் பாதித்துள்ளவர்களுக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் |4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்களால் இவ்வளவு தொகையை செலவிட முடியாது.
எனவே, நாகர்கோவில் நகராட்சி சார்பில் பரிசோதனை மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து, அடுத்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றலாம் என்று துணைத் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், நகரில் நபார்டு வங்கி நிதிஉதவியுடன் |6.5 கோடியில் 36 சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.