தினகரன் 26.08.2010
கூடுதல் டெபாசிட் தொகையை கட்ட தவறினால் குடிநீர்இணைப்பு துண்டிப்பு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் தகவல்
பரமக்குடி, ஆக.26: பரமக்குடி நகராட்சியில் 3 மாதத்திற்குள் கூடுதல் டெபாசிட் தொகையை கட்ட தவறி னால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையாளர் அட்சயா தெரிவித்தார்.
பரமக்குடி நகராட்சி பொதுமக்களுக்கு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கடந்த 2009 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் நகராட்சியில் குடியிருப்பு வீடுகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ 7 ஆயிரம், சாலை சீரமைப்பு கட்டணமாக கருங்கல் ஜல்லி சாலைக்கு ரூ 2 ஆயிரத்து 261 சேர்த்து ரூ 9 ஆயிரத்து 261ம் செலுத்த வேண்டும்.
தார்சாலைக்கு ரூ 3 ஆயிரத்து 641 சேர்த்து ரூ 10 ஆயிரத்து 641ம், சிமென்ட் சாலைக்கு ரூ 4 ஆயிரத்து 259 சேர்த்து ரூ 11 ஆயிரத்து 259 செலுத்தி ஒரு வார காலத்திற்குள் குடிநீர் இணைப்பு பெறலாம்.
இதேபோல் குடியிருப்பு அல்லாத வணிக உபயோகத்திற்கு டெபாசிட் தொகை யாக ரூ 15 ஆயிரம், சாலை சீரமைப்பு கட்டணமாக கருங்கல் ஜல்லி சாலைக்கு ரூ 2 ஆயிரத்து 261 சேர்த்து ரூ 17 ஆயிரத்து 261ம் செலுத்த வேண்டும். தார்சாலைக்கு ரூ 3 ஆயிரத்து 641 சேர்த்து ரூ 18 ஆயிரத்து 641ம், சிமெண்ட் சாலைக்கு ரூ 4 ஆயிரத்து 259 சேர்த்து ரூ 19 ஆயிரத்து 259 செலுத்தி ஒரு வார காலத்திற்குள் குடி நீர் இணைப்பு பெற லாம்.
இந்த விபரப்படி தொகையினை நகராட்சியில் நேரடியாக செலுத்தி வேலை செய்வதற்கான உத்தரவை அன்றே பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு அறிமுகமான பிளம்பர்களை கொண்டு தங்கள் கட்டிடங்களில் உள்குழாய் வேலைகளை செய்தபின் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தால் ஏழு தினங்களுக்குள் பகிர்மானக் குழாயில் துளையிட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இடை தரகர்களை அணுகாது, நகராட்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு இணைப்பு பெறலாம்.
பகிர்மான குழாய் இல்லாத இடங்களில் புதிய பகிர்மானக் குழாய்கள் இம்மாத இறுதிக்குள் அமைக்கப்பட உள்ளதால் அவ்விடங்களிலும் குடிநீர் இணைப்புகள் உடனடியாக வழங்கப்படும்.
இதுகுறித்து ஆணையாளர் அட்சயா கூறியதாவது:
புதிய குடிநீர் இணைப்பு பெறுபவர்களுக்கு 30 மீட்டர் வரை ஒரு கட்டணமும், 30 மீட்டர் முதல் 90 மீட்டர் து£ரம் வரை ஒரு கட்டணமும் கட்ட வேண்டும்.
நகராட்சியில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் திருத்தம் செய்யப்பட்ட கூடுதல் டெபாசிட் தொகையை 3 மாதத்திற்குள் நகராட்சி அலுவலகத்தில் தாங்களாகவே வந்து செலுத்தி குடிநீர் இணைப்பினை துண்டிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்