தினமணி 27.08.2010
திருநெல்வேலி மாநகர் நெல்லையில் சுகாதாரமற்று செயல்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கிக்கு சீல்
திருநெல்வேலி,ஆக.26: திருநெல்வேலியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.
திருநெல்வேலி சந்திப்பைச் சேர்ந்தவர் கு.மாடசாமி. இவர் சந்திப்பு பஸ் நிலையத்தில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இதற்கான உணவு பொருள்கள் தயாரிக்கும் இடமும்,கிட்டங்கியும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி வளாகத்தில் உள்ளது.
இந்த கிட்டங்கி மிகவும் சுகாதாரக் கேட்டுடனும், அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் என்.சுப்பையனுக்கு புகார்கள் சென்றன. புகாரின்பேரில் திடீர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி சாந்தி தலைமையில் உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், அந்த கிட்டங்கியில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கிட்டங்கி, மிகவும் சுகாதாரக் கேட்டுடன் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.