தினமணி 30.08.2010
குப்பைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் நாஜிம் ஆய்வு
காரைக்கால், ஆக. 29 : காரைக்கால் நகரில் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் பல்வேறு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம், நகராட்சி மூலம் அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தப் பகுதி மக்களிடம் தெரிவித்தார்.
÷காரைக்கால் அம்மையார் நகர் பகுதியில் 15 நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக அந்தப் பகுதியினர் நலச் சங்கம் சார்பில் அளித்த புகாரின்பேரில், ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நாஜிம் ஆய்வு செய்தார்.
÷ஆய்வு செய்ய வந்த நாஜிமை, காரைக்கால் அம்மையார் நகர் நலச் சங்கத் தலைவர் கே.வி.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் வசிக்கும் பகுதி அம்மையார் நகர் எனவும் நூற்றுக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகள் தினமும் அகற்றப்படுவதில்லை.
÷இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்களின் விளக்குகள் எரிவதில்லை உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். மின்துறை அலுவலகம், நகராட்சியில் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையென அடுக்கடுக்கான புகார்களை அவரிடம் தெரிவித்தனர்.
÷இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாஜிம் உறுதியளித்தார். ÷மேலும், காரைக்கால் நகருக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கிக் கிடக்கும் இடங்களையும், கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளையும் பார்வையிட்டார்.
÷இதுகுறித்து நாஜிம் கூறும்போது, மக்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கிக் கிடந்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும். இதுகுறித்து அரசுத் துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் மக்கள் தெரிவித்த குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.