Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க ரூ.2.92 லட்சம் இழப்பீடு

Print PDF

தினமலர் 02.09.2010

ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க ரூ.2.92 லட்சம் இழப்பீடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு, குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து காயம் அடைந்த இருவருக்கு இரண்டு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி 59வது வார்டுக்குட்பட்ட ராமைய்யன் காடு பகுதியில் பச்சியம்மாள், சித்ரா ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 1998ம் ஆண்டு இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதில் பச்சியம்மாள் மற்றும் சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் இழப்பீடு தொகை வழங்கக்கோரி சேலம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கின் அடிப்படையில் கடந்த 2006ம் ஆண்டு பச்சியம்மாள், சித்ரா ஆகிய இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சேலம் மாநகராட்சி சார்பில் இருவருக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே, பச்சியம்மாள், சித்ரா ஆகிய இருவரும் மாநகராட்சியின் ஐந்து வாகனங்களை ஜப்தி செய்யும் வகையில் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தவும், ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டும் சேலம் மாநகராட்சியில், பச்சியம்மாள், சித்ரா ஆகியோருக்கு தலா ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 261 ரூபாய்( இழப்பீட்டு தொகை, வட்டி, நீதிமன்ற செலவினம்) வீதம் இருவருக்கும் சேர்த்து இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 522 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.