Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பரங்குன்றம் நகராட்சி அதிகாரிக்கு அபராதம்

Print PDF

தினமணி 04.09.2010

திருப்பரங்குன்றம் நகராட்சி அதிகாரிக்கு அபராதம்

மதுரை, செப். 3: திருப்பரங்குன்றத்தில் கழிப்பறை ஏலம் தொடர்பான வழக்கில் நகராட்சி அதிகாரிக்கு ரூ.5,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பி.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் நகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பறை 16 கால் மண்டபம் அருகில் உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை விஜயலட்சுமி என்பவருக்குத் தொடர்ந்து நீட்டிப்புச் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உரிமையை ஏலத்தில் விட வேண்டும். இதனால் நகராட்சி வருமானம் உயரும் என நகராட்சிகள் மண்டல இயக்குநர், திருப்பரங்குன்றம் நகராட்சி ஆணையருக்கு பலமுறை மனு அளித்தேன். அதில் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், 30.3.2009-ல் கழிப்பறைக்காண கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலத்தில் விடப்படுவதான அறிவிப்பு 2.3.2009-ல் வெளியானது. ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டு 30.6.2009-ல் மீண்டும் விஜயலட்சுமிக்கே ஏலம் நீட்டிக்கப்பட்டது.

கழிப்பறைக் கட்டணம் வசூலிப்பதை ஏலத்தில் விட்டால் நகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கும். எனவே, ஏல நீட்டிப்பை ரத்து செய்து, பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சுகுணா, இந்த மனு ஏற்கப்படுகிறது. கழிப்பறைக்கான ஏலத்தை தமிழ்நாடு திறந்தநிலை ஒப்பந்த விதிமுறைப்படி திருப்பரங்குன்றம் நகராட்சி நடத்த வேண்டும். மேலும் இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே 7 முறைகளுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி சார்பில் யாரும் ஆஜராகி பதில் மனு மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே, நகராட்சி நிர்வாக அதிகாரிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதை அவரது சொந்தப் பணத்திலிருந்து, நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.