தினமணி 15.09.2010
வாய்க்கால் பாலம்: மராமத்து செய்ய மேயர் உத்தரவு
மதுரை,செப்.14: சேதமடைந்த அனுப்பானடி வாய்க்கால் பாலத்தை பார்வையிட்ட மேயர் தேன்மொழி அதனை மராமத்து செய்ய ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 6-வது வார்டு பகுதியில் மேயர் தேன்மொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள அனுப்பானடி பாலத்தை அவர் பார்வையிட்டார்.
மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். சேதமடைந்திருந்த பாலத்தில், உடனடியாக மராமத்துப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணையருக்கு மேயர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அப்பகுதியில் அரசு மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச கண்மருத்துவ முகாமை அவர் தொடக்கி வைத்தார்.
பின்னர் கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் சார்பாக வழங்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் செல்லம், செந்தில்குமார், ஹீராஜான், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் யு. அங்கையர்க்கண்ணி,கல்வி அலுவலர் வைத்திலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. பாஸ்கரன், நிர்வாகப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.